<$BlogRSDUrl$>

என் எண்ணக் கிறுக்கல்கள்...!

Tamil blogs of Selvaraj in Unicode format

18 February 2004

புது வீட்டுக்கு வாங்க ! 

கொஞ்சம் நாட்களாக நான் காணாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நானும் ஒரு புது வீட்டிற்குக் குடி போகப் போகிறேன். புதிய வீட்டின் சீரமைப்பை ஓரளவு செய்து விட்டேன். இன்னும் இருப்பதை நாளடைவில் பார்த்துக் கொள்கிறேன். அதனால், இனிமேல் இந்தப் புது வீட்டுக்கு வாங்க எல்லோரும்.

புது வீடு MovableType கொண்டு தயாரானது. இன்னும் சற்றுக் கடினமாக இருந்தாலும், ஒரு சுதந்திரம் இருப்பது போல் தெரிகிறது. புது நுட்பங்கள் கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் அமைகிறதே என்று ஒருபக்கம் எனக்கு ஆர்வ மிகுதியும் ஏற்படுகிறது.

அவசியம் வர வேண்டும். நன்றி.


09 February 2004

கருத்துக்கள், பின்னூட்டங்கள், ... 

தமிழ் வலைப் பதிவுகளுக்காக அ/கே/கே அல்லது வ/கே/கே என்று அடிக்கடியும் வழக்கமாகவும் கேட்கப்படும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து வைக்கும் வேலையில் இறங்கச் சிலர் சில மாதங்கள் முன்னர் முன்வந்தோம். அதில் கருத்துக்கள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், விமரிசனங்கள், என்று பலவாறாகக் கூறப்படும் பகுதி பற்றி நான் தயார் செய்ய முன்வந்திருந்தேன். ஒரு நீண்ட விடுப்பில் செல்ல நேரிட்டதால் முன்னரே இதனை முடிக்க முடியவில்லை. அதுவே எனது அதிகாரபூர்வமான சாக்கு !!

அதனை இப்போது முடித்து முதல் படியை வலையில் ஏற்றி உள்ளேன். அது பற்றிக் கருத்துக்களோ, திருத்தங்களோ இருந்தால் எனக்கோ, காசிக்கோ, ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள். இல்லையெனில் இங்கு கருத்துக்கள் இட்டுச் செல்லுங்கள்.

காசி ஐயா, வேலையை முடிச்சிட்டேனுங்க. ஒழுங்கா இருக்குதுங்களா ?

07 February 2004

இங்கொரு நூலகம் 

காலையில் இங்குள்ள பொது நூலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றிருந்தோம். ஏதோ Dino Math என்று எனக்கொன்றும் சுவாரசியமாய் இல்லாத நிகழ்ச்சி. ஆனால் என்ன ? குளிர்காலப் பனிக்குள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதை விட இது மேல் தான். தவிர நேரடியாய் எனக்கொன்றும் பிடிப்பில்லை என்றாலும், அங்கு தாள்களில் டைனசோர் அச்சில் வரைந்து வர்ணங்கள் பூசுவதும், வெட்டுவதும் ஒட்டுவதும், பல புதிர்கள் போடுவதும், இன்னும் அங்கிருந்த பல குழந்தைகளோடு விளையாட முடிந்த அந்தச் சூழலில் இருந்த நேரத்தைப் பெரிதும் விரும்பினார்கள் என் சிறுமிகள் இருவரும். (என்னை இவர்களுடன் விட்டு விட்டு மனைவி மட்டும் விவரமாய் புத்தகங்கள் பார்க்கச் சென்று விட்டாள் !).

வருடம் முழுதும் அவ்வப்போது இது போல் சில நிகழ்ச்சிகளை இந்த இலவசப் பொது நூலகம் ஏற்பாடு செய்வதுண்டு. இன்று போலில்லாமல் அவற்றுள் பல மிகவும் நன்றாகத் தான் இருக்கும். சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் இந்த நூலகத்தின் ஐந்தாவது பிறந்த நாள் விழா - கேக், மிட்டாய், இசை, ஆட்டம், என்று கொண்டாட்டம் தான். அதற்கு அடுத்த மாதம் தனக்கும் ஐந்து வயதாகிறது என்று நிவேதிதா அதனோடு ஒன்றிப் போய் விட்டாள். அந்த இசைக்குத் தக்கவாறு அவள் ஆடியபடி இருக்க, படம் பிடித்து உள்ளூர் வாரச் செய்தித்தாளில் போட்டு விட்டார்கள். அதனால், அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷம் கூடியது. ஒரு நூலகத்திற்குள், உதடு மீது விரல் வைத்து ஷ்ஷ்ஷ் என்கிற சத்தம் மட்டும் என்றில்லாமல், அத்தனை சத்தமும், சாப்பாடும், கொண்டாட்டமும் வித்தியாசமாகத் தான் இருந்தது. (ஒரு நாள் தான் என்றாலும்).
SolonLib5BD.jpg

குழந்தைகளுக்கான "கதை நேரம்" ஒன்றும் ஒவ்வொரு பருவத்திலும் வாரம் ஒருமுறை இங்கு இருக்கும். பல நாட்கள் நாங்களும் சென்றுவிடுவது உண்டு. சுமார் அரை மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் ஒரே வடிவத்தில் தான் இருக்கும். கதை சொல்பவர் ஒரு இரண்டோ மூன்றோ குழந்தைகள் புத்தகம் தேர்ந்தெடுத்து வைத்திருப்பார். அதை அப்படியே சற்று ஏற்ற இறக்கங்களோடும் புத்தகத்திற்கேற்ற சத்தங்களோடும் படிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் குழந்தைகள். அதிலும் சில துடுக்குத் தனமாகக் கேள்விகள் எல்லாம் கேட்கும். அந்தப் புத்தகத்திற்கு இடையில் ஓரிரு நிமிடங்கள் சிறிது பாட்டும் நடனமும் (அவர்களைத் தூங்க விடாமல் இருப்பதற்காக என்று நினைக்கிறேன் !!). முடிவில் அந்தக் கதையை ஒட்டிச் செய்த கைவினைப் பொருள் ஏதேனும். (இப்படியாய் என் பெண்கள் வீட்டில் சேர்த்த குப்பைகள் நிறைய ! அவர்களுக்குத் தெரியாமல் வேறு கழிக்க வேண்டுமே !!)

இவை தவிர இந்த நூலகங்களில் இலவசமாகத் திரைப்படங்கள் கூட எடுத்துப் பார்க்க முடிவது ஒரு வசதி. திருமணமாகி இங்கு வந்த புதிதில், ஆஷ்லாண்டு, ஹன்டிங்டன் என்னும் கென்டக்கி/மேற்கு வர்ஜீனியா மாநிலங்களின் குக்கிராமங்களில்(!) நாங்கள் இருந்த போது, இந்த நூலகங்களும், அங்கு கிடைக்கும் திரைப்படங்களும் தான் பெரும் பொழுதுபோக்காக இருந்தது எங்களுக்கு. இப்போதெல்லாம் இந்த நூலகத்தில் DVDக்கள் கூடக் கிடைக்கின்றன. இன்று தேடிக் கொண்டிருந்த போது மூன்று இந்திப் படங்களும் (நமக்குத் தான் இந்தி தெரியாதே!), ஒரு தமிழ்ப் படமும் (பாபா தான் பார்த்து விட்டோமே!) கூடக் கண்டேன். ஆனால் ஒன்றும் எடுத்து வரவில்லை. இந்தியத் திரைப் படங்கள் கூட வைத்திருக்கிறார்களே என்பது சுவாரசியமாய் இருந்தது.

சந்தேகம் வேண்டாம். இவையெல்லாம் இன்றி நூலகங்களுக்கே உரித்தான புத்தகங்களும் இங்கும் உண்டு தான். ஆனால் நான் தான் எதையும் எடுப்பதில்லை. எடுத்தாலும் இரண்டு மூன்று வாரங்கள் சும்மா வைத்திருந்து விட்டு திருப்பிக் கொடுத்துவிடுவது வழக்கம் !! அதற்கு எடுக்காமலேயே இருந்து கொள்ளலாம் அல்லவா.

அமெரிக்காவில் இப்படி ஒவ்வொரு ஊரிலும் அது எவ்வளவு சிறிதாய் இருந்தாலும் அங்கு நூலகங்கள் இருப்பது நன்றாக இருக்கிறது. மக்களுடைய வீட்டு வரிப் பணத்தில் ஒரு சிறு பங்கைப் பெற்றுக் கொண்டு இலவசமாக எல்லோருக்கும் பொதுவான சேவையைச் செய்கிறார்கள். எங்களூரில் வீட்டு வரியில் சுமார் 4% நூலகத்திற்கும், 65% பொதுப் பள்ளிகளுக்கும் செல்கின்றன. அந்த வரிப்பணம் கூடச் சரியாய் எதற்குச் செலவிடப் படுகிறது என்று தெரிவதும் மிக நன்று.

ஈரோட்டிலும் ஒரு பொது நூலகம் இருந்தது. நடுநிலை/உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற காலத்தில் நானும் அங்கு உறுப்பினராகச் சேர்ந்திருந்தேன். மரப்பாலத்திற்கு அருகே மண்டபம் வீதியில் ஒரு மாவரைக்கும் இயந்திரம் இருந்த கடைக்கு மேலே தான் இருந்தது அந்த நூலகம். அருகே செல்லும் போது அரைக்கப் படும் பொடிகளுக்குத் தக்கவாறு ("மொளகுபொடி", கொத்தமல்லிப் பொடி, அரிசி, இராகி, கோதுமை மாவு, இத்யாதி) மசாலா வாசம் ஆளைத் தூக்கும். அதில் அப்படியே மிதந்து போய், ஓரத்தில் இருக்கிற சுழல் படிக்கட்டு வழியாய் மேலே சென்றால் அந்த நூலகம். அது மிகப் புராதன கட்டிடமாய் இருக்க வேண்டும். அது போன்ற சுழல் படிக்கட்டுக்களை அந்தப் பகுதியில் அதிக இடங்களில் நான் பார்த்ததில்லை. பல புத்தகங்களை அங்கு எடுத்துப் படித்திருக்கிறேன்.

இம்முறை பயணத்தின் போது, வீட்டில் சும்மா இருந்த ஒரு வார இறுதியின் மதியம் கடைவீதி வரை சென்றவனுக்கு அந்த நூலகம் இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஆசை வந்து விட்டது. செல்லும் வழி எனக்கு மறக்கவில்லை. அந்த மாவரைக்கும் கடையும் அங்கிருந்து வரும் மணமும் கூட மாறவில்லை. அட... அந்த நூலகம் கூட இன்னும் இருக்கிறது. புதிதாய்ப் பெயர்ப் பலகையும் அருகே ஆயிரம் ரூபாய் கொடுத்த புரவலர்கள் பட்டியலும். அப்படி ஒன்றும் அந்தப் பட்டியல் நீளமாய் இல்லை. ஒரு ஐந்தாறு பேர் தான் இருந்திருக்கும். நானும் கூடப் புரவலனாகி விடலாம் என்று தான் எண்ணினேன். ஆனால் நூலகம் திறந்திருக்கவில்லை. திரும்பச் செல்ல எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

நிச்சயம் அடுத்த முறை என்று எண்ணிக் கொண்டேன். உள்ளே சென்று வர முடியவில்லையே என்ற ஏக்கம் மிதமாய் ஏற்பட்டாலும் பல நிகழ்வுகளுக்கிடையே அது தொலைந்தே தான் போனது.

04 February 2004

செம்பருத்தியும் செவ்வந்தியும் 

பூக்கள், செடி கொடிகள், மரங்கள், இவற்றைப் பற்றிய அறிவு பெரிதாய் இல்லாத சிறுநகரவாசி ஆக வளர்ந்தவன் நான். ஒரு முறை ஒரு கிராமத்திற்குச் சென்ற போது சோளத்தட்டைப் பார்த்து, "இது என்ன அரிசிச் செடியா ?" என்று நான் கேட்டதாகப் பல நாள் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். இன்னும் கூட எனக்கு வயலில் நெல்லுக்கும் சோளத்திற்கும் வித்தியாசம் எல்லாம் தெரியும் என்று நான் நம்பவில்லை.

இம்முறை ஊர் சென்றிருந்தபோது ஒருநாள் மூன்றும் ஐந்துமான மக்களிடம் கதை விட்டுக் கொண்டிருந்தேன். "குட்டி இது என்ன பூ தெரியுமா ? வெள்ளையாய் இருக்கில்லையா - அதனால் இது வெள்ளைப்பூ" !!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதெல்லாம் கேட்டறியாத அமெரிக்க மகள் சற்றே சந்தேகமாக என்னைப் பார்த்தாள். "பறிச்சு மேலிருந்து போட்டால், Fan மாதிரி சுத்துது பார், அதனால் இது White Fan பூ", என்று மேலதிக விளக்கங்கள் வேறு! "வெள்ளக் காத்தாடிப் பூ" என்று (கொங்குத்) தமிழில் சொல்லியிருந்தால் புரியாமல் போயிருக்கும். இப்போதும், என்னவோ வேடிக்கையாய் இருந்தது என்று மட்டும் புரிந்துகொண்டு பெரியவள் சிரித்துவிட்டுப் போனாள். குத்திய காது வழியை மறக்கடிக்க நான் விரித்த இந்தப் பூக்கதை வலையில் மெல்ல விழுந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாய்த் தோடணிந்த என் சிறியவள்.

என்னவோ தெரியவில்லை. இந்தச் செம்பருத்திப் பூவின் மீது மட்டும் எனக்கு ஒரு தனிப் பிரியம். அதற்குக் காரணம் ஒருவேளை அத்தனை கடும் பச்சை இலைகளுக்கு ஊடே தனியாகத் தெளிவாகத் தெரியும் கெட்டிச் சிவப்பு நிறமோ ? என்னவோ மற்ற பரவலான பூக்களை விட அசல் தமிழ்ப்பெயர் கொண்ட பூ இது என்பதாய் எனக்கு எண்ணம். கூடவே தாவரவியல் பாடத்தில் Hibiscus Indica (?) என்கிற கவர்ச்சியான(!) அறிவியற் பெயரும். செம்பருத்தி என்றாலே மனசுக்குள் மிருதுவான ஒரு உணர்வு.
semparuththi.jpg

என்னுடைய முதல் மகளுக்குக் கூட முதலில் செம்பருத்தி என்று பெயரிடலாம் என்று கொஞ்ச நாள் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அதை Semparuththi என்று எழுதி அதனால் இந்த ஊர்க்காரர்கள் படப் போகும் அவஸ்தையை எண்ணி அவ்வெண்ணத்தைக் கை விட்டு விட்டேன். (இப்படியொரு பெயரை நான் மனதுக்குள் யோசித்த போதே இல்லத்தரசி வெட்டி விட்டாள் என்பது வேறு விஷயம் !)

முதன் முதலில் ஈரோட்டில் ஒரு பள்ளி நண்பன் வீட்டில் தான் செம்பருத்திப் பூவை நான் அறிமுகம் செய்து கொண்டதாய் ஞாபகம். முதல் மாடி வாடகை வீட்டில் இருந்த எங்களுக்குப் பூ என்றால் சட்டியில் வைத்த மேஜை ரோஜாவும், வயலட் நிற டிசம்பர் பூவும் தான். ஆனால் நண்பன் வீட்டைச் சுற்றி மதில் சுவருக்கு உட்புறம் முழுவதுமாய் செடி கொடிகள். முன்வாசலுக்கு வலது புறம் அருகருகே இட்லிப்பூவும் என் இதயம் கவர்ந்த செம்பருத்தியும்.

செம்பருத்திப் பூ வரவேற்கும் எந்த வீடும் எனக்குப் பிடித்திருக்கிறது.

காரணம் தெரியாமல் எனக்குப் பிடித்த இன்னொரு பூ - செவ்வந்திப் பூ. அதற்குக் காரணம் தெரியவில்லை என்பது மட்டுமல்ல. அதை நான் பார்த்ததாகவும் நினைவில்லை. ஏதாவது பாட்டில் கேட்டிருப்பேனோ ? கதையில் படித்திருப்பேனோ ? இருக்கலாம். இரண்டு வருடத்திற்கு முன்னர், சரி நாமும் இனிக் கவிதைகள் என்று மீண்டும் ஏதேனும் எழுதலாம் என்று எண்ணியபோது முதல் தகுதியாய் ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் (!!!) என்று எண்ணினேன். அதற்கு நான் தேர்ந்தெடுத்த பெயர் - "செவ்வந்தி". மீண்டும், ஏன் என்று யாரும் காரணம் கேட்காதீர்கள்! எனக்கும் தெரியாது.

ஓ ! செவ்வந்தி எத்தனை கவிதை எழுதினார் என்றும் யாரும் கேட்டு வைக்காதீர்கள். பூஜ்யப்பூ தான்.

பூக்கள் பற்றி அதிகம் தெரியாது என்று இருந்தாலும், எழுத ஆரம்பித்ததும் இன்னும் கொஞ்சம் பூவிவரங்கள் எனக்கும் கூட எட்டுகின்றது என்பது ஆச்சரியமான விஷயம் தான். பட்டியலில் அடுத்ததாகப் பிடித்த பெயர்களாய் செண்பகப்பூவும் செந்தூரப்பூவும் எட்டிப் பார்க்கின்றன. "செ"வில் ஆரம்பிப்பதால் தான் இவை எல்லாம் எப்படி இருக்கும் என்று தெரியாமலே பிடிக்கிறதோ ?

புதுப்பாளையத்துப் பொடக்காலியில் (புழக்கடை) சலதாரைத் தண்ணீர் பாய்ந்து வளர்ந்த மல்லிகைச் செடி கூட நினைவுக்கு வருகிறது. உதிரியாய் மல்லியும் முல்லையும் நூலில் சரமாய்க் கட்ட நான் கூடச் சில சமயம் முயன்றிருக்கிறேன். ஆனால், ஊசி வைத்துக் கோர்ப்பது தான் எனக்குச் சுலபமாய் இருந்திருக்கிறது. திருமணமான புதிதில் எனக்குப் பிடித்தவை மல்லியும் முல்லையும் என்றிருந்தேன் மனைவியிடம். அவள் வீட்டுச் செடிகளில் இம்முறை மந்தாரையும் சிவனுக்கு உகந்த மஞ்சள் சங்குப் பூவும் கண்டேன்.

செயற்கையாய்த் தலையில் எதையேனும் மாட்டிக் கொண்டிருக்கும் இங்கிருந்து ஊர் சென்ற என் பெண்கள் ஆசையாய்ப் பல பூக்களைத் தலையில் சூடிக் கொண்டார்கள். அவற்றுள் கனகாம்பரமும் ஒன்று. பூச்சூடிப் பொட்டும் வைத்துப் பூரித்த முகத்தோடிருந்த பெண்களின் அழகைக் கண்டு மனம் மகிழவே அடிக்கடி ஊருக்குப் போக வேண்டும் போலிருக்கிறது.
Daugters_in_India.jpg

"ஐய, இது நல்லாவே இல்ல", என்று தன் அம்மா சொன்னதையும் கேட்காமல், காருக்கு முன்விளக்குகள் போலே காதுக்கு மேலே இரண்டு பக்கங்களிலும் ரோஜாவை அணிந்துகொள்வேன் என்று அடம் பிடித்தபடி பெண் முக மலர்ச்சியோடு தானே காராக மாறிப் போன நேரங்களும் இனிமையானவை.

"அட, விடு. அதனால என்ன ? அவ ஆசப்படற மாதிரி வச்சுக்கட்டுமே..."

குழந்தைகளிடம் கிறுக்குத்தனமான செய்கைகளுக்கும், கோணங்கித் தனங்களுக்கும், வேடிக்கை காட்டுவதற்கும் என்றும் தயக்கமில்லாத ஒரு அப்பன் நான். எனது சிறு வயதுப் படம் ஒன்றில் எனக்கும் கூட ரிப்பன் கட்டிக் குடுமி போட்டு... ஹ்ம்ம்... பூ வைத்திருந்தார்களா நினைவிலில்லை. முதல் மொட்டைக்கு முன் எடுத்த படம் கண்ணாடிச் சட்டம் போட்டு வீட்டில் எங்கோ உட்கார்ந்திருக்கிறது.

டிசம்பரில் இரண்டு நாள்ப் பயணமாய் ஈரோட்டில் இருந்து இரயிலில் பெங்களூருக்குக் கிளம்பினோம். ஆறேழு பேராய் அதிகாலையில் அவசரமாய் கிளம்பிச் சென்று பெட்டியில் அமர்ந்த பின் வண்டி கிளம்பியது. சிறிது நேரம் கழித்துத் தான் கவனித்தேன். எனது பெண்களின் தலையில் அவ்வளவு அழகாகப், புதிதாக, வெள்ளையாக, அருமையாக ஒரு பூ. அவர்கள் அருகில் வந்த போது, ம்ம்ம்ம் என்னே ஒரு இனிய வாசம்! அடர்த்தியாக இருந்து அழகைக் கூட்டிய அது என்னவாய் இருக்கும்? என்னவோ சாமந்தி என்பார்களே... ஒருவேளை அதுவோ என்று எண்ணியபடி கேட்டேன். "இல்லை செல்வா, இது செவ்வந்திப் பூ" என்ற பதில் கிடைத்தது.

"ஓ, இதுதான் செவ்வந்தியா ?"

எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே எனக்குப் பிடித்திருந்த ஒரு பூவை, பெயர் தெரியாத போதே எனக்குப் பிடித்திருந்தது என்பதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது.

01 February 2004

தமிழோடைத் திரட்டி 

எனது திரட்டிப் பக்க முயற்சி.

தமிழ் வலைக்குறிப்புக்கள் அதிகமாகி வரும் இன்னாளில், புதிதாய் யார் எழுதியிருக்கிறார்கள் என்று அதிக நேரம் விரையப்படுத்தாமல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முதலில் வலைக்குறிப்பர்கள் தங்களது பக்கங்களுக்கு செய்தியோடை ஏற்பாடு செய்ய வேண்டும். Blogger-ல் இப்போது அந்த வசதி தரப்பட்டுள்ளது.

இரண்டாவது, செய்தியோடைத் திரட்டிகள் கொண்டு பிறரது தளங்களைக் கவனித்துக் கொள்ளலாம். அவரவர் தனித்தனியாக செய்தியோடைத் திரட்டிகள் வைத்துக் கொண்டு தாம் விரும்பும் பிறரின் ஓடைகளை இணைத்துக் கொள்ளலாம். அந்தத் திரட்டிகள் NewsMonster போன்று அவரவர் மேசை மீது இருக்கலாம். அல்லது Bloglines போன்று இணையச் சேவையாய் இருக்கலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், புதிதாக யாராவது எழுத ஆரம்பித்தால் அவரை நாமாகச் சேர்க்க வேண்டும். அதோடு திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த வேலையைச் செய்ய வேண்டும் (அவரவர் விருப்பம் பொருத்து). இதற்கு பதிலாக தமிழ் வலைப்பக்கங்கள் போலே எல்லோருக்கும் பொதுவான ஒரு இணையப் பக்கமாய் திரட்டித் தளம் இருந்தால், யாராவது ஒருவரோ, நிர்வாகிகள் என்று சிலரோ, ஒரு இடத்தில் புதிய ஓடையைச் சேர்த்து விட்டால் போதும். எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படியான ஒரு முயற்சியைத் தான் வெங்கட் இங்கே செய்திருக்கிறார். ஆனால், அதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். யூனிகோடு குறியீட்டைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் கூறியிருந்ததைப் போல, பத்ரியின் ஓடை எனக்குச் சரியாகப் பாயவில்லை. யூடிf-இன் மூன்று பைட்டுக்கள் ஒன்றொன்றாகக் குதறித் தான் தென்படுகிறது.

அவரைப் போன்றே கடந்த பல மாதங்களாக நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். BlogStreet தரும் சேவை ஒன்றையொட்டி அமைந்த எனது முயற்சியை இங்கே காணலாம். இங்கும் நன்றாகத் தெரிவது வெங்கட்டின் ஓடை மட்டுமே. பிற ஓடைகள் எல்லாம் அதே பைட் குதறல்களுக்கு ஆளாகிக் காணாமல் போகின்றன. ஆங்கில எழுத்துக்களோ, அல்லது எண்களோ இருந்தால் மட்டும் தெரிகிறது. கண்ணனின் "வைகைக்கரைக் காற்றே" வெறும் ...32, ...33 என்று தெரிவதைக் கவனியுங்கள்.

அதோடு Atom ஓடைகளை BlogStreetற்கு இன்னும் அடையாளம் காணத் தெரியவில்லை. BlogStreet-ல் தனக்குள்ள தொடர்பை வைத்து பத்ரி தான் இந்த வசதியை அவர்கள் ஏற்படுத்தித் தருமாறு செய்ய வேண்டும். Bloglines மக்கள் கூட ஒரு மாதம் முன்னர் தான் இந்த வசதியைச் செய்திருக்கிறார்கள். அது ஏற்பட்டால் அப்புறம் திரட்டிப்பக்கம் வந்தாலே போதும் - புதிய பதிவுகளைப் படிப்பதற்கு. அதற்குள் வெங்கட் ஏதேனும் Magic செய்யவும் கூடும். இப்போதைக்கு அதற்கும் Atom ஓடைகளைப் படிக்கத் தெரியவில்லை என்று எண்ணுகிறேன்.

இவை இரண்டில் ஒன்று செயல் படுத்த முடிந்தாலும் நல்லது தான்.

31 January 2004

நேர்மையும் நீதியும் 

சிறு வயது முதல் முடிந்தவரை நேர்மையாய் இருக்க நான் முயற்சி செய்து வந்தது உண்டு. கால ஓட்டத்தில் அந்த முயற்சிக்குச் சவால்கள் ஏற்பட்ட போது சில இடங்களில் வழுக்கி இருக்கலாம். ஆனாலும் இயன்றவரை இன்னும் அந்த முயற்சியில் தவறுவதில்லை. இதற்காக "idealist", "பொழைக்கத் தெரியாதவன்" என்று பட்டங்கள் பல கிட்டியிருக்கின்றன. "யதார்த்தமாய் இரு", "நீ மட்டும் இப்படி இருந்து என்ன கிழிக்கப் போகிறாய்?" என்று அறிவுரைகளுக்கும் குறைவே இருந்ததில்லை.

ரேஷன் அட்டையில் வீட்டில் இருக்கிற நபர்களுக்குத் தகுந்த அளவு பொருட்கள் வழங்கப் படும் என்று இருந்த அந்தக் காலத்தில், வீட்டில் இல்லாத சில நபர்களைச் சேர்க்க என் பெற்றோர் விழைய, அதற்கு நான் முட்டுக் கட்டையாக இருந்த கதையை இன்னும் திட்டிக் கொண்டே என் அன்னை நினைவு கூர்வார். இருப்பினும் உள்ளூர அவர்களுக்குப் பெருமை தான் என்று நான் நினைத்துக் கொள்வேன். (இதைக் கேட்டால், "ஆமா..அஞ்சாறு பெரும... போடா... பொழைக்கத் தெரியாதவனே" என்பாராயிருக்கும்!)

பொறியியற் கல்லூரி விண்ணப்ப காலத்தில் தாசில்தார் அலுவலகத்தில் சமூகச் சான்றிதழ் வாங்க வேண்டியிருந்த போது, உடன் பயின்ற சில மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும் நேராகத் தாசில்தார் அலுவலகத்தில் சென்று கொஞ்சம் அதிகச் செலவில் சிறப்புச் சலுகையோடு காரியத்தை முடித்துக் கொண்டதுண்டு.

எந்தக் கையூட்டும் தர மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்பில் நானும் இன்னும் சிலரும் இழுத்தடிக்கப் பட்டோம். முதலில் ஒரு விண்ணப்பப் படிவத்தில் மணியகாரர் (?) கையொப்பம் வாங்க வேண்டும் என்று அவர் வீட்டு வாசலில் அதிகாலையில் தவம் கிடக்க வேண்டும். அதன் பிறகு வெளியூர் சென்று விட்ட Revenue Inspector (வருவாய் அதிகாரி) இடம் அதே தாளில் அவர் வரும் தேதி அறிந்து சென்று கையொப்பம் வாங்கி வரவேண்டும். இவ்விடங்களில் எல்லாம் நேரிடையாகவோ சுற்றி வளைத்தோ காசு கேட்கப் படுவதையும் சமாளித்தாக வேண்டும். அதன் பிறகு மீண்டும் தாசில்தார் அலுவலகம் சென்று விண்ணப்பத்தைக் கொடுத்த பின் மறுநாளோ சில தினங்கள் கழித்தோ சான்றிதழ் தரப்படும். எல்லாம் முடிந்து சான்றிதழ் எடுத்துக் கொண்டு வரும் வேலையாளிடமும் ஒரு பத்து வேண்டும் என்னும் கோரிக்கையை எதிர் கொள்ள வேண்டும் ! ஒரு அரசு பொதுமக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள் தானே இவை. இதற்கு எதற்கு இத்தனை இழுபறிகள் ?
---

கல்லூரி நாட்களில் விடுதிச் செலவை நிர்வாகிகளே பார்த்துக் கொள்வதில் ஏதோ "கோல்மால்" நடக்கிறது என்று எல்லோரும் குற்றம் சாட்டி மாணவர்களே பார்த்துக் கொள்வது என்று ஒரு நிலை ஏற்பட்டது நல்லதுக்காகத் தான் இருந்திருக்க வேண்டும் ஆனால் அதையே மாணவப் பிரதிநிதிகள் செய்து காசடித்துக் கொண்ட கதை தெரிய வந்த போது ஒரு ஏமாற்ற உணர்வே ஏற்பட்டது. அதிகாரமும், வாய்ப்புக்களும் ஏற்படும் போது சலனங்களும் அதிகரிக்கத் தான் செய்யுமோ ? இருப்பினும் ஒரு மன உறுதியோடு அவற்றை எதிர்கொள்ளாமல் இப்படி நிழல் வளைந்த மனிதர்களாக மக்கள் மாறுவது ஏன் ?

சிறு அளவில் இப்படி ஆரம்பிப்பதும், பின் அது பழகி விடுவதும் தான் பின்னர் பெரிய அளவிலும் பொதுவாழ்விலும் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. இந்தக் கறைகள் படியாத கடைசி இடம் என்று தான் நீதித் துறையை நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அதிலும் எனக்கு ஏமாற்றத்தைத் தரத் தொடங்கியிருக்கின்றன. நீதித் துறையின் சில கேவலங்கள் பற்றி பத்ரி சமீபத்தில் பதிந்திருக்கிறார். இது போல் காசு வாங்கிக் கொண்டு நீதி பல இடங்களில் விற்கப்படுகிறது என்று ஒரு வதந்தியாக என்னுடைய இந்தியப் பயணத்தின் போது அறிந்து கொண்டேன். மேற்சொன்ன நிகழ்வு போல் பத்திரிக்கைகளில் வெளி வராத செய்தியாய், ஆனால், காது வழிச் செய்தியாய் சிறு ஊர்களில் நடக்கின்ற (தாகச் சொல்லப்பட்ட) சிலவற்றை அறிந்தேன்.

"இப்பொ இருக்கிறவர் காசு வாங்குபவர். இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வு பெற்று விடுவார். அது வரைக்கும் இழுத்துவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்", என்று ஒரு நீதிபதியைப் பற்றி ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிடம் (எனது உறவினர்) கூறியதாய் அறிந்தேன்.

இன்னும் சிலவற்றில் தமக்கோ, தம் வாரிசுகளுக்கோ ஆபத்து ஏற்படும் என்கிற மிரட்டல்களுக்கு ஆளாகியும் நீதி நடுங்குவதாகவும் காதுவழியே வதந்தி.

குறிப்பு: இவை எல்லாம் ஆதாரபூர்வமான செய்திகளோ எனது சுய அனுபவங்களோ இல்லை. அதனால் தான் வதந்தி என்கிறேன். ஆனாலும் பரவலாய் இது பலரது கருத்தாகவும் இருக்கிறது. யாரும் என் மீது அவதூறு வழக்குக் கொண்டு வராதீர்கள். இவை என் கருத்துக்களல்ல.(எதற்கு வம்பு என்று தான் :-) ).

இப்படிப்பட்டவை ஒரு வெட்கக்கேடு என்று கூறும் பா.ராகவன் அதே சமயம் அவர்களும் மனிதர்கள் தான், தவறு செய்யும் பிரகஸ்பதிகள் அங்கும் இருக்கிறார்கள், தவறு செய்பவர்களைக் குறை கூறுவோம், ஆனால் ஒட்டு மொத்த நீதித் துறையும் அப்படித்தான் இருக்கிறது என்னும் முடிவுக்கு வரவேண்டாம் என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட நம்பிக்கை சற்றே குறைந்து கொண்டு வந்தாலும், அவரைப் போன்றே நானும் இன்னும் அந்த நம்பிக்கையோடே இருக்கின்றேன். இவை ஒரு சில களைகளாக மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும்.

இருப்பினும், இந்தக் களைகள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. அவை இருக்கின்றனவோ என்ற ஐயங்களும் பரவலாக மக்களிடம் பரவாதிருக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போது தான் நீதித்துறையின் உயர்ந்த பீடத்திற்கும் மதிப்பிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதன் மீது மக்களின் நம்பிக்கை குறையாதிருக்கும்.
---

ஒரு இற்றைப்பாடு:

சில வழக்குகளில் தாமதமாக ஏன் தீர்ப்புச் சொல்லப் படுகிறது என்று தெரியவில்லை என்று ஒரு புகழ்பெற்ற வழக்கின் தீர்ப்புப் பற்றி நானும் அதற்கு முன்பே காலம் கடந்த நீதி பற்றிக் காசியும் எழுதி இருந்தோம். முழுத் தீர்ப்பைப் படித்த வழக்கறிஞர் பிரபு அது பற்றி விரைவில் தனது கருத்துக்களை எழுதுவதாகக் கூறி இருக்கிறார். அதைப் படிக்கவும் ஆவலாய் இருக்கிறேன்.

25 January 2004

தொடரும் கிறுக்கல்கள் 

இந்தியாவில் இருந்து இந்த வாரத்தில் தான் வந்து சேர்ந்தோம். அங்கே எண்பது டிகிரி வெப்ப நிலையும், தினம் குடித்த இளநீரும் இதமளித்துக்கொண்டிருந்தது. இன்று இங்கு குருதியை இறுக வைக்கும் இந்த எட்டு டிகிரிக் குளிரின் இடையில் இல்லத்தில் சிறை. குவிந்து கிடக்கிற வெண்பனித் தூவல்களின் அளவும் உயரமும் அதிகரித்துக் கொண்டே அச்சமுறுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால், "அடக் கஷ்டமே" என்றில்லாமல், "அட, என்ன அழகாய் இருக்கிறது" என்று கண்களை விரித்துக் கொண்டு சற்று வித்தியாசமாகப் பார்த்தால் அந்தச் சன்னலின் வழியே தூவும் பனியும், அதை மொட்டைக் கிளைகளில் தாங்கிச் சூரிய ஒளியில் மிளிரும் மரங்களும் தனி அழகு தான். எதையும் எதிர்மறைச் சோர்வோடு இன்றி இப்படி ஒரு நேர்மறையாய் எடுத்துக் கொள்வது தான் மனதுக்கும் நல்லது.



என்ன ? ஒரு மாதமாய் எடுக்கப்படாத வண்டியின் பாட்டரி கீழிறங்கிப் படுத்துவிட்டது. அதனால் என்ன ? நாளை பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு வலைக்குறிப்புக்கள் படிக்கலாம் என்று நேற்று முழுதும் கணிணி முன் அமர்ந்து விட்டேன். இந்த ஆறு வார காலத்தில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. பல புதியவர்கள் தமிழ்க் குறிப்புக்களுக்கு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பதிவுகள் அதிகமாக அதிகமாக் அவற்றைக் கவனித்துப் படிப்பது என்பது பெரும் வேலையாய் இருக்கிறது. எல்லோருமே RSS செய்தியோடை பற்றி இப்போது யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். Blogger-ல் கூட Atom முறைப்படி செய்தியோடையை இப்போது ஏற்படுத்திக் கொள்ளலாம் போலிருக்கிறது. இந்த வசதி இல்லாத போது வழித்தெடுத்தல் (scraping) முறைப்படி PHP கொண்டு நான் சில முயற்சிகள் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் ஊர் சென்றுவிட்டதால் முழுமை பெறவில்லை. இனி அது அவசியமும் இல்லை. ஆனாலும் அந்த முயற்சியின் போது சில புது நுட்பங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது நல்ல விஷயம். இனி ஒரு நல்ல செய்தியோடைத் திரட்டியாகப் பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும்.

வரும் சில நாட்களுக்கு இந்தியப் பயணத்தை/நினைவுகளை ஒட்டிய குறிப்புக்களாய்ச் சில எழுதலாம் என்றிருக்கிறேன்.

05 December 2003

போவோமா ஊர்ப்பயணம்... 

வருடா வருடம் ஊர் போகத் தான் ஆசை. ஆனால், பல வருடங்களுக்குப் பின் தான் இப்போது செல்லும்படி அமைந்து விட்டது. பற்பல காரணங்களால். நாளை கிளம்பும் முன் இன்னும் பெட்டி கட்டாமல் இம்முறை அப்படி ஒரு அவசரம், மும்முரம் வேறு. அதனால் ஊர் செல்லுகின்ற தாக்கம் இன்னும் தெரியவில்லை. மும்பை விமான நிலையத்தில் இறங்கும் போது முகத்தில் வந்து மோதப் போகிற இந்தியக் காற்றுத் தான் பரவசத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன். அதன் பிறகு சென்னை வழியாய்ச் சென்று, கடைசிக் கட்டத்தில் இரயில் வழியாய் ஈரோடு போய்ச் சேரும் போது மொத்தமாய் இங்கிருந்து (க்ளீவ்லாண்டு) கிளம்பி 45 மணி நேரம் ஆகியிருக்கும். பிள்ளைகள் ரெண்டும் பெட்டிகள் நான்குமாய் போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க மாட்டோம் என்று எண்ணுகிறேன். சோர்வான பயணமாக இருந்தாலும் சுகமான இலக்கு என்பதால் அலுப்பேதும் தெரியாது.

அகலக் கால் வைப்பது எனக்கு ஒரு பழக்கமாகி விட்டது. இந்த வலைப் பதிவுகள் பக்கத்தை மேம்படுத்துவதில் சிறிது நாட்கள் ஈடுபட்டுப் பல திசைகளில் சென்று விட்டேன். HTMLல் இருந்து XHTML பக்கமாய் மாற்ற முயன்றேன். Blogger விளம்பரப் பட்டை தவறாய் வருவதால் முழுமையாய்ச் செயல்படுத்த முடியவில்லை. கருத்துக்கள் வ.கே.கே.க்கு சிறிது சிறிது செய்திருந்தாலும் முழுமையாய் என் பங்கை முடிக்க முடியவில்லை. PHP அறிவு இல்லாததால் RSS செய்து முடிக்கவில்லை. இவையெல்லாம் ஏன் எதற்கு எப்படி என்பது உட்பட இனி எல்லாம் திரும்பி வந்து தான். ஊரில் இணைய வசதி வாய்ப்பு எப்படி என்று தெரியவில்லை. எதுவும் செய்ய முடியவில்லை எனில், இந்த வலைப்பதிவுகளும் இனி ஆறு வாரங்கள் கழித்துத் தான். ஆனால், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது பதிக்க முற்படுகிறேன்.

நீண்ட நாட்கள் ஊர் செல்லாமல் இருப்பவர்கள், கால்களில் கட்டியிருக்கிற சக்கரங்களைக் கழட்டி விட்டு ஒரு நிமிடம் நின்று யோசித்துப் பாருங்கள். தாமதமாவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் அங்கே காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் ஒரு நடை போய் வந்து விடுங்கள். முடிந்தால் ஒவ்வொரு வருடமும். எதுவும் செய்யவில்லை என்றாலும், பெற்றவளாவது சற்று மகிழ்ச்சியுறுவாள்.

பிறகு சந்திப்போம்.


30 November 2003

ஆத்தாவும் தொலைபேசியும் 

சிறு வயதில் அம்மாயி என்று அழைத்த ஞாபகம் இருக்கிறது. மழை பொய்த்து விவசாயத்திற்குப் பெரு வரவேற்பில்லாத புதுப்பாளையம் கிராமத்தை விட்டு வேறு பிழைப்புத் தேடி அம்மா/அப்பா, மாமா எல்லோரும் ஈரோட்டிற்குக் குடி பெயர்ந்து விட்ட சமயம். அம்மாயி அவ்வப்போது ஊரில் இருந்து பலகாரங்களுடன் வந்து போன நாட்கள் புகைப்படலமாய் நினைவில். எனக்கு வயது நான்கோ, ஐந்தோ இருக்கலாம். காலப்போக்கில் அம்மாயி/அப்பச்சியும் ஊர்ப்பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு ஈரோட்டிற்கு வந்து விட்டனர். அம்மாயியாத்தா சுருங்கி ஆத்தா என்று ஆகிவிட்டது. எதுகையாய்க் கூடவே அப்பச்சியும் (அம்மாவிற்கு அய்யன்) தாத்தா ஆகிவிட்டார்.

அமெரிக்கா வந்த பிறகு ஆறு மாதத்தில் தாத்தா காலமாகி விட, அதன்பிறகு ஊர் சென்ற போதெல்லாம், தாத்தா இல்லாது தனித்திருக்கும் ஆத்தாவிடம் அது ஒரு மனக்குறையை, வெறுமையைத் தந்திருப்பதை உணர முடிந்தது. சமீப காலத்தில் ஆத்தாவுக்கும் உடல்நிலையில் சற்றுத் தளர்வு. பல ஆண்டுகளாய் இருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொலைபேசியில் பேசக் கூட எல்லா நேரங்களிலும் அவர்களால் முடிவதில்லை.

எப்போதுமே ஆத்தாவுடன் தொலைபேசியில் பேசும் அனுபவம் சுவாரசியமானது. அதிக பட்சம் பேச்சு மூன்று நான்கு நிமிடங்கள் தான் இருக்கும். வாரம் ஒருமுறையானாலும் சரி, மாதம் ஒருமுறையானாலும் சரி பெரும்பாலும் பேசும் விஷயங்கள் ஒன்றாகவே இருக்கும். முக்கியமாய், எப்போது ஊருக்கு வருகிறேன் என்கிற கேள்வி மட்டும் அவர்களிடம் எப்போதும் இருக்கும்...

"ஹலோ ஆத்தா, எப்படி இருக்கீங்க ?"
"ஹலோ...ஹலோ..."

மறுமுனைக்கு என் பேச்சொலி சென்றிருந்தாலும் ஆத்தாவின் காதினில் இன்றிக் காற்றினில் கரைந்து விட்டிருக்கும். தொலைபேசியின் வாய்ப்பகுதியைச் சுற்றிக் கையைக் குவித்துக் கொண்டால் ஒலி சிதறாது என்று மீண்டும் சத்தமாய்,

"ஹலோ, ஆத்தா எப்படி இருக்கீங்க... நான் செல்வராஜ் பேசறேன்..."
"செல்வராசா ? நல்லாத்தான் இருக்கறனாயா. நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க ?"

பின்னணியில் "ஃபோனக் காதுல வச்சுப் பேசுமா" என்று அம்மாவின் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.

"..."
"இப்போ அங்க மணி எத்தன ?
"காலையில மணி 10 ஆச்சுங்க ஆத்தா"
"காலையிலயா ? இப்பத் தான் இங்க ராத்திரி..."

ஒவ்வொரு முறை பேசும் போதும் ஆத்தாவுக்கு இது தீராத வியப்பு. அமெரிக்காவிற்கு என்னை வழியனுப்பச் சென்னைக்கு வந்ததைத் தவிர, தான் பிறந்து, வளர்ந்து, புகுந்த ஊர்களை விட்டு அதிக பட்சம் சுமார் 100 மைல் சுற்றளவைத் தாண்டிப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. பூமியின் வடிவமும் சுழற்சியும், இரவு பகல் மாறி மாறி வரும் தன்மைகளும் சற்றுப் புரியாத பரிமாணங்களாய் இருந்திருக்கலாம். ஆத்தா என்றில்லை இன்னும் பல பேர் "இப்போ அங்க மணி எத்தன?" கேள்வியைக் கேட்டு வியந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

தனது (கொள்ளுப்) பேத்திகளைப் பற்றிப் பேச்சுத் திரும்பும். "பொண்ணுங்க நல்லா இருக்காங்களா ? வளந்துருக்காங்களா ?"

இரண்டரை வருடங்களுக்கு முன் குழந்தைகளைப் பார்த்ததற்கும் இப்போதைக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். நேரில் செல்லத் தான் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஒரு தொடர் படம் (விடியோ) செய்து அனுப்பினால் பார்த்து மகிழ்வார்களே என்று எனக்குள் பல நாட்களாய் எண்ணம். இரு வருடங்களாய் எடுத்த படங்களை வெட்டி ஒட்டி வேலை செய்து கொண்டும் இருந்தேன். இன்னும் பட நாடாவில் கொஞ்சம் இடம் இருக்கிறது. பெண்களின் முறையே ஐந்து, மூன்று வயதுக் கொண்டாட்டங்களையும் பதிவு செய்து மொத்தமாய் அனுப்பிவிடலாம் என்றோ வேறு காரணங்களாலோ இது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

ஆத்தாவிற்கு என்ன வயது இருக்கும் ? யாருக்கும் சரியாய்த் தெரியாது. பிறந்த நாள், தேதி, கிழமை - ம்ஹும் வாய்ப்பே இல்லை. என் அம்மாவிற்கே வயது என்ன என்பதற்கு, என் வயதையும், அம்மா-அப்பா திருமணத்தின் போது அவர்களுக்கு என்ன வயது என்பதையும், அதன் பிறகு எத்தனை ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன் என்பதையும் வைத்துத் தான் கணிக்க முடியும். குத்துமதிப்பாக, இந்த முறையினை இன்னும் கொஞ்சம் வளர்த்தால், ஆத்தாவின் வயதைச் சுமார் 75, 80 என்று சொல்லலாம்.

கிராமத்தை விட்டு நகரத்தின் பக்கம் வந்த போது தனது வயதில் பாதிக்கும் மேல் ஆகியிருக்க வேண்டும். உடல் வலுக் குறையாத வயதில் ஆத்தா எல்லா வேலைகளையும் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன். எனது பள்ளிக் காலங்களில் அதனைக் கண் கூடாகப் பார்த்தும் இருக்கிறேன். உடல் முடியாத போதும் மனம் அயராமல் எதையாவது செய்ய முற்பட, அம்மா முதலானோர் "நாங்க பாத்துக்கறோம். நீ கம்முனு இரும்மா" என்று கூறவும் கேட்டிருக்கிறேன். உடலை வருத்திய சர்க்கரை நோய் நிலை பற்றியும் பேச்சுத் தவறாமல் இருக்கும்.

"உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு ? டாக்டர் கிட்டப் போனீங்களா ?"
"எதோ இந்த எட்டுக்குக் கொஞ்சம் தேவுலைப்பா. சக்கரைக்கு மாத்திரை கேக்க மாட்டீங்குதுன்னு டாக்டரு தெனமும் ஒரு ஊசி போடச் சொல்லிட்டாரு. அத்தை தான் போடறா. அதனால இப்பக் கொஞ்சம் பரவாயில்ல"
"..."

"சரி... எப்ப ஊருக்கு வர்றீங்க ?"
"அ...அது... இன்னொரு நாலஞ்சு மாசமாவது ஆகுங்காத்தா "

இந்த வருடக் கடைசி வரை வர இயலாது என்று கூற எனக்கு மனம் வராது. சென்ற வருடம் செல்ல முடியாமல் இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று தெரிந்த போதும் "குறைந்தது நாலு மாதம்" என்பது தான் என் பதிலாய் இருக்கும். அதற்கே அவர்களின் பதில்,
"இன்னும் நாலு மாசமா ?" என்று ஏமாற்றமாகத் தான் இருக்கும்.

சமீபத்தில் ஊர்ப்பயணத் திட்டங்கள் உறுதியாகி விட்டன. நான்கு வருடங்களுக்குப் பிறகு டிசம்பர் முதல் வார இறுதியில் ஊர்ப் பயணம். தொலைபேசியில் இம்முறை கேள்விக்குக் காத்திருக்கப் போவதில்லை.

"ஆத்தா, டிசம்பர் மாசம் ஊருக்கு வரோம். இன்னும் ரெண்டே மாசம் தான். டிக்கட் எல்லாம் கூட வாங்கிட்டோம்"

சுருங்கிய தோலும், குழி விழுந்த கண்களும், நரை கலந்த தலையுமாக இருந்தாலும், அவற்றின் ஊடே பார்வையில் பாசமும், முகத்தில் வாஞ்சையுமாய் இருக்கும் ஆத்தாவைப் பார்த்த உடனே போய்க் கட்டிக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் அவர்களால் இரயில் நிலையம் வர முடியாதோ ? இயலாது எனில் வீட்டிற்குச் சென்றவுடன் முதல் வேலை அது தான். எனது முகத்தைப் பிடித்துப் பார்த்துப் பரவசப்படும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரக்கிறது. எப்போதும் நேராக நீளாமல் நடு முழியில் மடங்கிக் கிடக்கும் (இடது?) கைச்சுண்டு விரல் இன்னும் அப்படியே தான் இருக்கிறதா என்று தடவிப் பார்க்க வேண்டும்.

அது தான் இன்னொரு மாதத்தில் ஊருக்குப் போகப் போகிறோமே, அதனால், அந்தத் தொடர்படத்தைக் கூட நேரில் போகும் போது எடுத்துக் கொண்டு போய் விடலாம். "இது என்ன, அது இந்த இடம்" என்று வர்ணனையோடு உடன் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அதை இன்னும் நான் அனுப்பவில்லை. அன்றாட வாழ்க்கை இரைச்சல்களில் மூழ்கிச் சில நாள் அதை நான் மறந்தும் போனேன் என்பதும் உண்மை.

ஆத்தாவுக்கு உடன்பிறந்தவர்கள் பல பேர். சிதறித் தொடர்பற்றுக் கிடப்பவர்கள், சின்ன வயதில் இறந்து போனவர்கள், தான் வளர்த்த தமக்கையின் வாரிசுகள், என்று உறவு மரம் விரிவானது. எனக்குத் தான் சொந்தங்கள் எதுவும் சரியாய்த் தெரியாது. சென்ற முறை சென்றிருந்த போது விரிவாய் ஒரு சிலேட்டும் கையுமாக ஆத்தாவிடம் கேட்டுப் படம் போட்டுத் தெரிந்து கொண்டது நினைவில் இருக்கிறது. ஒழுங்காய் எழுதி வைக்காதது நான்கு வருட இடைவெளியில் எல்லாம் மறந்து விட்டது. இம்முறை எல்லாவற்றையும் நன்கு ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். உறவுகள்/குடும்ப மரம் ஒன்று வரைந்து கொள்ள வேண்டும். தனது கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கும் ஒரு சந்தோஷத்தைத் தரும் விஷயமாய் இருக்கலாம் என்பதாலும் இந்த முனைப்பில் எனக்கு ஆர்வம்.

ஆயிற்று... இன்னும் ஒரே வாரம் தான். அடுத்த சனிக்கிழமை கிளம்பி ஊர் சென்று விடலாம். இவ்வளவு நாள் தாமதமானால் என்ன ? ஆறு வார விடுப்பில் செல்வது அனைவருக்கும் நன்றாய் இருக்கும். இடையில் இந்த வாரத்தில் நான்கு நாட்கள் விடுப்பு இருக்க, வெளியூர் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது தொலைபேசியில் ஒரு செய்தி சேர்ந்து இரண்டு நாட்களாகக் காத்திருந்தது.

"உடல்நலக் குறைவு அதிகரித்து ஆத்தா நேற்றிரவு 11.50 க்குக் காலமாகி விட்டார்கள்"

அதிர்வாய் இருந்தது. கண்களில் நீர் வரவில்லை. மெலிதான ஒரு சோகம் மரத்துப் போன உணர்வுகளில் கலந்தது. இன்னும் பத்து நாட்களில் சென்றிருப்போமே... நான்காண்டுகள் பொறுமையாய் இருந்த இயற்கைக்கு இப்போது அப்படி என்ன அவசரம் ? தெரியவில்லை. காரணம் புரியவில்லை என்றாலும் இயற்கையின் நியதிகளை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை...

அன்புள்ள என் ஆத்தாவிற்கு எங்களின் இதயம் நிறைந்த அஞ்சலி.

25 November 2003

யூனிகோடும் UTF-8 முறையும் 

யூனிகோடு மற்றும் UTF-8 குறியீட்டு முறைகள் பற்றி எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கணிணிகளின் பயன்பாட்டுக்கு எப்படி அமெரிக்க ஆஸ்கி முறை ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய எண்களை அடையாளம் காட்டுகிறதோ, அதுபோல யூனிகோடு உலக மொழிகள் அத்தனையிலும் உள்ள எழுத்து வடிவங்களுக்கும் உரிய ஒரு எண்ணைக் கட்டிச் சேர்த்து வைக்கும் பெரிய அண்ணன். உதாரணத்திற்கு 65 என்றால் 'A', '97' என்றால் குட்டி 'a' - இது ஆஸ்கி. ஒரு பைட்டுக்கு ஒரு எழுத்து என்று ஆங்கிலத்திற்கு மட்டும் 128 இடங்களுடன் அது போதுமானதாய் இருந்தது. ஏன் மிச்சம் ஒரு பிட் கூட இருந்தது. (இன்னொரு 128 இடங்கள் = விரிவு ஆஸ்கி). ஆனால் எல்லா மொழிகளையும் உள்ளடக்க இது போதுமானதாய் இல்லை. சரி, ஒன்றிற்கு இரண்டு பைட்டுகள் என்று (16 பிட் = 65536 இடங்கள்) எடுத்துக் கொண்டால் இது சாத்தியமாகும் என்று யூனிகோடு முயற்சிகள் ஆரம்பமாயின. இப்போது சில சீன, கொரிய, ஜப்பானிய எழுத்துக்களின் தேவைக்காக 4 பைட் வரை (32 பிட்) எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு வந்திருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மொழிகளை இன்னும் இரண்டு பைட்டுக்களுக்குள் அடக்கி விடலாம்.

0 முதல் 65535 வரையில் சாத்தியமான எண்களில், தமிழ் எழுத்துக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்கள் 2944 முதல் 3071 வரை. இதையே U+0B80 முதல் U+0BFF வரை என்றும் கூடச் சொல்லலாம். இது பதினாறாம் அடிப்படையில் இருக்கும் இலக்க முறை (hexa decimal system representation). இந்த எண்களை இரண்டு பைட்டுக்களில் அடக்கி விடலாம். பதினாறு பிட்டுக்கள் போதும். எல்லா யூனிகோடு எழுத்துக்களையும் இரண்டு பைட்டுக்களுக்குள் அடைத்து விட முடியுமா எனில் அதில் சில இடைஞ்சல்கள். முதலில் பழைய ஆஸ்கி எழுத்துக்கள். அவை நீண்ட காலமாக ஒரு பைட் கொண்டே பயன்படுத்தப் பட்டன. அதனால் அதே முறையில் இருந்தால் தான் வசதி. இரண்டாவது, புதிய 4 பைட்டுக்கள் தேவைப்படும் சீ.கொ.ஜ (சீன, கொரிய, ஜப்பானிய) எழுத்துக்களை இரண்டு பைட்டுக்களில் அடக்க முடியாது.

இந்தச் சிக்கல்களை நீக்க ஒரு குறியீட்டு முறை வேண்டும் என்று பிறந்தது தான் UTF-8 முறை. இன்று இந்த முறை பரவலாகிக் கொண்டு வருகிறது. எந்த ஒரு யூனிகோடு எழுத்தையும் குறிக்க, ஒன்று முதல் நான்கு வரையிலான பைட்டுக்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, கீழ் ஆஸ்கி எனப்படும் ஆங்கில எழுத்துக்களுக்கு ஒரு பைட். மற்றவற்றிற்கு இரண்டோ மூன்றோ அல்லது நான்கோ. கீழே இருக்கும் பிட் அமைப்பைக் காண்க. ஒன்றும் பூஜ்யமும் மாறாதவை. 'b' என்றிருக்கும் இடங்கள் ஒன்றையோ பூஜ்யத்தையோ கொண்டிருக்கலாம்.


0bbbbbbb
110bbbbb 10bbbbbb
1110bbbb 10bbbbbb 10bbbbbb
11110bbb 10bbbbbb 10bbbbbb 10bbbbbb


தமிழ் எழுத்துக்கள் எல்லாமே (16 பிட்டுக்கள் போதும் என்றாலும்) இந்த முறைப்படி மூன்று பைட்டுக்கள் (24 பிட்டுக்கள்) கொண்டு அமைக்கப் படும். ஆனால், இன்னும் பல செயலிகளும், பழைய செயலிகளும் மூன்று மூன்று பைட்டாகச் சேர்த்து ஒரு எழுத்தாய்ப் பார்க்காமல், தனித்தனி பைட்டாகப் பார்ப்பதால், சில சமயம் எதிர்பாராத விதமாய்த் தமிழ் எழுத்துக்கள் குதறப் பட்டு கிறுக்கல்களாய்த் தெரியும்.

மனஓசை சந்திரவதனாவின் 16 November 2003 தேதிய இந்தப் பதிப்பைப் பாருங்கள். இந்த பைட் குதறல்களின் விளைவு இப்படி இருக்கிறது.

à®®à¯..... விடிநà¯à®¤à¯ விடà¯à®Ÿà®¤à®¾..?
நேறà¯à®±à¯ à®®à¯à®©à¯ தினம௠அஸà¯à®¸à¯†à®®à¯à®ªà®¿à®²à®¿ மீறà¯à®±à®¿à®™à¯. வீட௠வநà¯à®¤à¯ சேர நேரமாகி விடà¯à®Ÿà®¤à¯. வழமையில௠வரà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯ ஒர௠நாளà¯à®¤à®¾à®©à¯ இபà¯à®ªà®Ÿà®¿ அடà¯à®Ÿà®•à®¾à®šà®®à®¾à®• இர
இந்தப் பக்கம் வரும் யாருக்காவது இதை எப்படி மாற்றலாமென விபரம் தெரிந்தால்
எனக்குத் தெரியப் படுத்துங்கள். என்னிடம் வேறு பிரதியும் இல்லை


என்னுடைய யூனிகோடு UTF-8 ஆராய்ச்சியும் முயற்சியும் கொண்டு என்னால் முடிந்த அளவு அவர் இழந்த பதிப்பை இப்படி மீட்டிருக்கிறேன். முழுவதையும் அவருக்கு மின்மடல் வாயிலாய் இன்று அனுப்பி விடுகிறேன்.

..... விடிந்த் விட்டதா..? நேற்ற் ம்ன் தினம் அஸ்ஸெம்பிலி மீற்றிங். வீட் வந்த் சேர நேரமாகி விட்டத். வழமையில் வர்டத்தில் ஒர் நாள்தான் இப்படி அட்டகாசமாக இர்க்க்ம். ஆனால் இவ்வர்டம் எமத் பழைய தலைமையதிகாரி ஓய்வில் சென்ற் விட ப்திய தலைமையதிகாரி வந்த் ஒரே அட்டகாசம்தான். இத் இவ்வர்டத்தின் மூன்றாவத் அட்டகாசமான அஸ்ஸெம்பிலி மீற்றிங். காரியதரிசியைத் தொடர்ந்த் தலைமையதிகாரியே கிறிஸ்மஸ் போனஸ், சம்பள உயர்வ், விட்ப்ப் விதிகள்...


உகர உயிர்மெய்யெழுத்துக்கள் வெறும் மெய்யாகி விட்டது. அதை அவர் சரி செய்து கொள்ளலாம். இழந்ததைப் பெற்றோம் என்று அவர் மகிழ்வாரா தெரியவில்லை. இருப்பினும் எனக்கு என்னவோ பெரியதாய் சாதித்து விட்டது போன்ற உணர்வு. அதனால் நான் மகிழ்ந்து கொள்கிறேன்...